Tuesday, May 19, 2015

பிரபாகரன் - இமாலய வியப்பும் மாபெரும் வீழ்ச்சியும்

1

மே18, அதிர்ச்சி பேரவலம் வெறுமை எல்லாமும் நம்மை உலுப்பிய நாள். கண்ணிமைக்கும் நேரத்தில் ஏதோவொரு மணித சஞ்சாரமற்ற இடத்தில் நமது தேசம் தூக்கி வீசப்பட்டது. இப்போதும் இவைகள் எல்லாம் உண்மைதான் என்று நம்பும்படி நம்மை நாமே ஆற்றுப்படுத்த வேண்டியிருக்கிறது. அந்த அளவிற்கு நாம் வெற்றியின் மீதும், தன்னலமற்ற அந்த மகத்தான மனிதர்கள் மிதும் இம்மியளவும் சஞ்சலமற்ற நம்பிக்கையைக் கொண்டிருந்தோம்.

இந்த நம்பிக்கையின் முலமாக இருந்ததுதான் பிரபாகரன் என்ற நாமம். ஈழத் தமிழர்களின் கால் நூற்றாண்டு கால வாழ்வுடன் இரண்டறக் கலந்த நாமமது. சிங்களத்திற்கு சிம்ம சொப்பனமாக இருந்த நாமம் அது. பிரபாகரன் என்ற நாமம் கால் நூண்டு கால நமது வாழ்வில் தமிழர்களை ஒன்றுபடுத்தும், வசியப்படுத்தும் ஒரு குறியீடாக இருந்திருக்கிறது என்பதை அவரை விமர்சித்தவர்கள் கூட நிராகரிக்கப்போவதில்லை. மே18 இற்கு முன்னர் நமது தலைவர் பிரபாகரன் வீழக் கூடியவர், புலிகளை தோற்கடிக்க முடியும் என்ற வார்த்தைகளை நம்புவதற்கு நம்மில் விரல்விட்டக் எண்ணக் கூடியவர்கள் கூட இருந்திருக்கப் போவதில்லை. அந்தளவிற்கு அவர் மீது வெறித்தனமானதொரு நம்பிக்கை நிலவியது. அப்படி நம்புவதற்கு ஏராளமான காரணங்களும் இருந்தன.

இன்று அவர் நம்மை விட்டு மறைந்து ஒரு வருடமாகிவிட்டது. அவர் இருந்த காலத்தில் அவர் குறித்து பக்கம் பக்கமாக எழுதுவதற்கு ஆட்களும் விடயங்களும் இருந்தன. ஆனால் இன்று எங்கிருந்து தொடங்குவது என்பதே பிரச்சனையாக இருக்கின்றது. அவருக்கு அஞ்சலி செலுத்தும் நோக்கில் கட்டுரையொன்றை எழுத வேண்டுமென்று அமர்ந்ததிலிருந்து எங்கிருந்து தொடங்குவது எதை எழுதுவது என்பதே ஒரு பிரச்சனையாக இருந்தது. அந்தளவிற்கு நம்மை வெறுமை ஆட்கொண்டிருக்கிறது. துரதிஸ்டவசமாக அந்த வெறுமையின், இயலாமையின் சொந்தக்காரராகவும் அவரே இருக்கிறார் என்பதுதான் வேதனைக்குரியது. 

2

சில வருடங்களுக்கு முன்னர் ஆபிரிக்க எழுத்தாளர் கூகிவா தியாங்கோவின் சிலுவையில் தொங்கும் சாத்தான்என்னும் நாவலை படித்தபோது ஏற்பட்ட உணர்வை இந்த இடத்தில் நினைத்துப் பார்க்கிறேன். விடுதலைக்கு பின்னரான கென்ய வாழ்வை சித்தரிக்கிறது அந்த நாவல். கென்யாவை காலணித்துவத்திலிருந்து விடுவிப்பதற்காக மாவ் மாவ் என்னும் விடுதலை இயக்கம் போராடியது ஆனால் விடுதலைக்கு பின்னர் எவர் விடுதலைக்காக போராடினார்களோ அவர்களே புதிய முதலாளித்துவ வாக்கத்திடம் கையேந்தும் இழி நிலைக்குத் தள்ளப்பட்டனர். தொழிலுக்காக அலைந்து திரிந்தனர். இதனை படித்த காலத்தில் நமது விடுதலைப் போராட்டம் சாதனைகளின் களமாக இருந்தது. திரும்பிய திசைகளில் எல்லாம் பெருமிதமும் நம்பிக்கையும் மட்டுமே பரவியிருந்த காலமது. ஆனால் நமது போராளிகளுக்கும் அப்படியொரு அவலநிலை வரும் என்பதை நம்மால் துளியளவு கூட எண்ணியிருக்க முடியாது. ஆனால் இன்று!

இன்று ஒன்பதாயிரத்துக்கு மேற்பட்ட போராளிகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். எந்த எதிரிக்கு எதிராக போராடுவதற்காக தயார் செய்யப்பட்டார்களோ அந்த எதிரிகளின் அனுதாபத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். காயப்பட்ட எதிரிகளுக்கு சேவகம் செய்வது நமது பெண் போராளிகள். என்னவொரு அவலம். இன்று நமது பெண் போராளிகள் எதிர் கொள்ளும் நெருக்கடிகள் ஏராளம் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அது குறித்து மௌனம் சாதிப்பதே உசிதமாக இருக்கும்.
இது குறித்தெல்லாம் நமது தலைவர் பிரபாகரன் அவர்கள் தனது இறுதிக்கணங்களில் சிந்தித்திருப்பாரா. தானே தேசத்தின் உயிர் நாடியாக இருந்த சூழலில் தனக்கு பின்னர் தன்னை நம்பியிருந்தவர்கள் எவ்வாறு சின்னாபின்னப்பட்டுப் போவார்கள் என்பது குறித்தெல்லாம் அவர் சிந்திக்காமலா இருந்திருப்பார்?

திரு.பிரபாகரன் அவர்களை நினைவு கொள்ளும் இந்த சந்தர்ப்பத்தில் அவர் குறித்து இப்படியான கேள்விகள் எழுவதை தவிர்த்துச் செல்ல முடியவில்லை ஏனெனில் ஒருவரை நினைவு கொள்ளுவது என்பது அவரது பலத்தை மட்டுமல்ல பலவீனத்தையும் நினைவு கொள்வதுதான். அடுத்து வரப்போகும் தலைமுறை அவரது பலமாக சொல்லப்படும் விடயங்களில் மட்டுமல்ல பலவீனங்களிலிருந்தும் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.

3

இன்று தமிழர்களின் வீழ்சிக்கான அனைத்துப் பழிகளும் அவர் மீதே சுமத்தப்படுகிறது. இது எதிர்பார்க்கக் கூடிய ஒன்றும்தான். புலிகள் என்றால் அதன் அர்த்தம் பிரபாகரன் என்பதாகவே இருந்தது. அவரின்றி ஒரு அணுவும் அசையாது அசையவும் கூடாது என்னும் நிலை. எனவே கால் நூற்றாண்டு கால பேரெழுச்சிக்கு அவர் உரித்தாக இருக்க முடியுமென்றால் அதன் வீழ்சிக்கும் அவரேதான் பொறுப்பாக இருக்க வேண்டும் என்பதே இதிலுள்ள தர்க்கம். இது அவரே உருவாக்கிக் கொண்டதா அல்லது ஒரு காலகட்டத் தேவைக்காக உருவாக்கப்பட்ட ஒழுங்குக்குள் மீள முடியாதவாறு அவர் விழுந்துவிட்டாரா அது பற்றி எதையும் நம்மால் ஊகிக்க முடியவில்லை ஆனால் ஒருவரை நோக்கி விரல் சுட்டும் போது ஏனைய நான்கு விரல்களும் கைநீட்டியவரை சுட்டி நிற்பதாக ஒரு கருத்துண்டு. அதே போன்றுதான் திரு.பிரபாகரன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் இந்த தருணத்தில் அவரது காலத்தில் அவரது எல்லா செயல்களையும் விமர்சனமற்று தமது நலன்களுக்காக நியாயப்படுத்திய அனைத்து தரப்பினருக்கும் அவரது வீழ்சியில் பங்குண்டு என்பதையும் இந்த இடத்தில் நினைவு கொள்ள வேண்டியிருக்கிறது. அவரது செயல்கள் எல்லாவற்றுக்கும் அவர் உணர்ந்து கொள்ளும் முன்னரே விளக்க உரைகள் எழுதிய எல்லா ஊடகங்களுக்கும் அதில் பங்கு கொண்ட நபர்களுக்கும் அவரது வீழ்சியில் பங்குண்டு. இதனை நாம் இந்த தருணத்திலாவது நேர்மையுடன் ஒப்புக் கொள்ள வேண்டும். 

ஏனைய விடுதலைப் போராட்ட அனுபவங்களுடன் ஒப்பிட்டால் நாம் கொடுத்த விலையும் தியாகங்களும் ஏராளம். நமது சக்திக்கு அப்பாற்பட்டே நாம் விலை கொடுத்திருக்கிறோம். ஆனால் ஏனைய விடுதலைப் போராட்டங்களில் வெற்றி தோல்விக்கு அப்பாற்பட்டு வழங்கிய அறிவுத் தேடலுக்கான வாய்ப்புக்கள் எதனையுமே நமது போராட்டம் வழங்கவில்லை. வெற்று சுலோகங்களை முன்னிறுத்தும் ஒரு கூட்டத்தையும். விசுவாசிகள் என்ற பேரிலான நேர்மையற்ற குழவினரையுமே நமது போராட்டம் அடுத்த தலைமுறைக்காக விட்டுச் சென்றிருக்கிறது. திரு.பிரபாகரனின் மறைவோடு எல்லாமே முடிந்துவிட்டதான ஒரு சூழல் தோன்றியிருக்கிறது என்றால் நமது அரசியலில் நிட்சயமாக எங்கோ பாரிய பிரச்சனை இருந்திருக்கிறது என்றுதானே அர்த்தம். இதற்கும் காரணம் திரு.பிரபாகரன் என்பதைத் தவிர ஈழத் தமிழர்களிடம் வேறு பதிலிருக்கப் போவதில்லை.

ஈழத் தமிழர் தேசத்தின் வரலாற்றில், மிக உண்ணதமான இடத்தில் வைத்துப் போற்றவேண்டிய அவர் துரதிஸ்டவசமாக இன்று வரலாற்றின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கிறார். எல்லோரும் அவரது செயற்பாடுகளை குறுக்கு விசாரனை செய்யும் உரிமையை எடுத்துக் கொள்ளும் சூழல் தோன்றியிருக்கிறது.

இன்று எத்தனையோ மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்திய நமது மக்கள் தமது எதிர்காலத்தின் நம்பிக்கையாக இருந்த ஒரு மனிதரை சிறு விளக்கொளியில் நினைவு கூர முடியாதளவிற்கு கையறு நிலையில் இருக்கின்றனர். எத்தகையதொரு அவலம் நமது தேசத்திற்கு நிகழ்ந்திருக்கிறது. எத்தனை தியாகங்கள் வலிகள் சுமந்து நகர்ந்த போராட்டம் இது. இன்று அவற்றின் போசகராக இருந்த ஒரு பெரும் மணிதரை நினைத்து சில நிமிடங்களாவது அமைதியில் அழ முடியாதளவிற்கு மக்கள் மனங்கள் கல்லாகியிருக்கின்றன. அவர் உருவாக்கிய ஒளிவட்ட அரசியல் இறுதியில் அவருக்கே ஒளி மறுக்கும் அரசியலாக உருச் சிதைந்திருக்கிறது.

எனது பெருமதிப்புக்குரிய தலைவர் பிரபாகரன் அவர்கள் குறித்து அஞ்சலி செலுத்தும் நோக்கில் ஒரு கட்டுரையை எழுத வேண்டுமென்று எண்ணியதும் அவர் குறித்து எழுதப்பட்ட கட்டுரைகள் ஏதும் இருக்கின்றதா என்று தேடியபோது திரு.க.வேபாலகுமாரன் எழுதிய இமாலய வியப்புஎன்ற கட்டுரையை மீண்டுமொருமுறை வாசித்துப் பார்த்தேன். அரசியலில் பரந்த ஆற்றல் இருப்பதாகச் சொல்லப்பட்ட பாலகுமாரன் இவ்வாறு எழுதிச் செல்கிறார்

எல்லா வகையிலும் எம்மால் எட்டமுடியாத உயரத்திலுள்ளவர்; பற்றி எழுதுவதற்கு இப்படியொரு வாய்ப்புக் கிட்டியமை எனக்கு எதிர்பாராதது. ஆனால் இவ்வாறு எழுதுவதன் மூலமாவது அவரை ஏதோவொரு வகையில் எட்டவோ, தொடவோ முடிந்தது பற்றி எனக்குப் பெரு மகிழ்ச்சி. இவற்றினைவிட நன்றியை, பிறர் நயப்பைக்கூட எதிர்பார்க்காத அவருக்கு இப்படியாவது எமது பெரு நன்றியை பேரன்பை செலுத்த முடிந்ததே என்கிற ஆறுதலும் கிட்டுகின்றது.

1970 களிலேயே தமிழன் கதை முடிந்த கதையென்றானது, தப்பித்தலே, தாயகம் விட்டு புலம்பெயர்தலே இறுதி வழியானது. தமிழன் என்று சொல்வதே இழிவானது. இந்நிலை நீடித்திருந்தால் என்னவாகியிருக்கும் ? உலகின் அழிந்து படுகிற மொழியாக தமிழனும் அழிந்துபடுகின்ற இனமாக ஜ.நாவால் பிரகடனப்படுத்தும் நிலையல்லவா தோன்றியிருக்கும்.
இந்த கட்டத்தில் பிரபாகரன் அவர்களின் வருகை நிகழ்கிறது. அவர் மட்டுமல்ல இன்னும் பலரினதும் வருகையும் நிகழ்ந்தது. ஆனால் வரலாறு வழங்கிய வாய்ப்பினை அவர் ஒருவரால் மட்டுமே நிறைவேற்ற முடிந்தது. ஏனையோர் பின்வாங்கியதும் பழைய நிலைக்குச் சென்றதுவும் அதற்கு காரணம் தேடுவதில் இன்றளவு காலம் கழிப்பதும் எந்தளவு நகைப்புக்குரிய விடயம். இன்று பிரபாகரன் அவர்கள் தனது பணி மூலம் தமிழ்த் தேசிய இனத்தினை கட்டுக் கோப்பான, தனது விடுதலைக்காக பல்வேறு தளங்களில் போராடுகின்ற நவீன தேசியங்களின் பண்புகள் பொதிந்த ஒரு முன்னணி அணியாக்கி விட்டார், அதாவது அவரே தமிழ்த் தேசிய இனத்தினை இணைக்கின்ற காக்கின்ற மாபெரும் சக்தியாகிற அதேவேளை அவரே அதன் உருவமுமாகிவிட்டார். இதுவொரு வரலாற்றின் புதிய பரிமாணம். தலைவர்கள் தேசியப் போராட்டத்தினை முன்னெடுத்தமை பற்றி அறிந்திருக்கிறோம். ஆனால் இங்கோ தலைவனே தேசியத்தி;ன் வடிவமாகிவிட்டதை காண்கிறாம். இதனால் அவரே தேசியத்தின் தலைவன் என்கிறோம்;’

இப்படி பல விடயங்களை அடுக்கிச் செல்கின்றார் பாலகுமாரன். கட்டுரையின் முடிவில் குறிப்பிடப்பட்டிருந்த ஒரு வாசகத்தைத்தான் நாம் முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டும்.

“To think freely is great
To think correctly is greater”

சுதந்திரமாக சிந்தித்தலென்பதே மிகப் பெரிய விடயம்தான். ஆனால் மிகச் சரியாக சிந்திப்பது என்பது அதனையும்விட பாரிய விடயம். இதனையே எமது தேசியத் தலைவருக்கு நாம் பேரன்பின் வரிவடிவமாக சூட்டுகின்றோம். (விடுதலைப் புலிகள் ஏடு -2004)

பிரபாகரன் அவர்களை நமது நினைவுகளில் போற்றும் இந்த வேளையில் அவர் நமது அடுத்த தலைமுறையின் சிந்தனைக்காக எந்த கேள்வியை விட்டுச் சென்றிருக்கின்றார். தன்னால் ஒவ்வொரு சந்தர்பங்களிலும் சுதந்திரமாக சிந்திக்க முடிந்திருக்கிறது ஆனால் சரியாக சிந்தி;க்க முடிந்திருந்ததா? ஏன் அவ்வாறானதொரு நிலமை ஏற்பட்டது? இனிவரப்போகும் எல்லா காலங்களிலும் ஈழத் தமிழ் சமூகத்தில் தோன்றவிருக்கும் புதிய தலைமுறைச் செயற்பாட்டாளர்கள் ஒவ்வொருவக்குமான பாடபோதனை இது.


வரலாற்றில் தனிநபர்களின் மகத்தான பாத்திரங்கள் பற்றி அதிகம் பேசப்பட்டிருக்கிறது. ஆனால் என்னதான் தனிநபர்கள் ஆற்றல் பெற்றவர்களாக இருந்தாலும் தனிநபர்களால் ஒரு வரலாற்றுப் போக்கையே மாற்றியமைக்க முடியாது. இதற்கு இரும்பு சான்~pலராக வருணிக்கப்பட்ட பிஸ்மார்க்கின்; கூற்றுக்கள் சான்று.

கனவான்களே! நாம் சென்ற காலத்தின் வரலாற்றையும் புறக்கணிக்க முடியாது, எதிர்காலத்தையும் படைக்க முடியாது. காலம் கழிவதைத் துரிதப்படுத்துவதற்குரிய வழி என்று கடிகாரத்தின் முள்ளை முன்நோக்கித் திருப்பிவிடும்படி ஒரு தவறான நினைப்பு சிலரைத் தூண்டுகிறது. இந்த தவற்றைப் பற்றி உங்களை நான் எச்சரிக் விரும்புகிறேன். நான் சாதகப்படுத்திக் கொண்ட நிகழ்சிகளின் மீது என்கிருக்கிற செல்வாக்கு சகஜமாகவே மிகைப்படுத்திச் சொல்லப்படுகிறது. எனினும் நான் சரித்திரத்தை படைக்க வேண்டும் என்று என்னை யாரும் கோர மாட்டார்கள். நானும் நீங்களும் சேர்ந்து இந்த உலகத்தையே எதிர்க்க முடியும். ஆனால் நான் உங்களோடு சேர்ந்து கொண்டு பாடுபட்டாலும்கூட என்னால் சரித்திரத்தை படைக்க முடியாது. அது படைக்கப்படும் வரையில் நாம் காத்துக் கொண்டுதான் இருக்க வேண்டும். விளக்குச் சூட்டைக் காட்டி நாம் பழத்தை சீக்கிரமாகப் பழுக்கும்படி செய்ய முடியாது. மேலும் பழுக்குமுன்பே அதை நாம் பறித்தாலும் அதன் வளர்ச்சியைத் தடுத்து அதைக் கெடுத்துவிடுவோம்.தன்னிடம் என்னதான் அற்றல்கள் இருந்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் தன்னால் பயணிக்க முடியாது என்பதை பிஸ்மார்க் உணர்ந்திருந்ததன் எதிர்வினைதான் இந்த வார்த்தைகள்.

இது 1869இல் கூறப்பட்ட வார்த்தைகள். இன்று நமது சூழலில் மீண்டும் உயிர் பெறுகிறது. பல்வேறு வரலாறுகளைப் படித்த திரு.பிரபாகரன் அவர்கள் இது பற்றி உணராமலா இருந்திருக்கிறார். அவர் சாதகப்படுத்திக் கொண்டவைகள் அனைத்தும் அவரது ஆற்றல்களால் மட்டுமே விழைந்தவையல்ல என்பதை அவர் அறியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. இருந்தும் அவர் ஏதோவொரு மாயைக்குள் கட்டுண்டு கிடந்திருக்கிறார். இது அவராக உருவாக்கிக் கொண்டதா அல்லது அவர் தனது விசுவாசிகள் என்று நம்பியவர்கள் எல்லோரும் சேர்ந்து அவரை இ;வ்வாறானதொரு மாயைக்குள் மீண்டெழாதவாறு சிறைப்படுத்தி விட்டனரா? இப்படியாக பல கேள்விகள் எழுகின்றன.

வீரர்கள் பற்றிய தனது நூலில் கார்லைல் மாமனிதர்கள் என்போரை தொடக்கி வைப்பவர்கள் (Beginners) என்று வர்ணிக்கிறார். ஏனெனில் மற்றவர்களைவிட அவன் அதிக தூரம் பார்க்கிறான். மற்றவர்களைவிட அவன் விடயங்களை அதிக ஆர்வத்துடன் விரும்புகிறான். அவன் வீரன் இயல்பான போக்கை தடுக்கவோ மாற்றவோ முடியுமென்ற அர்த்தத்தில் அல்ல. அவசியமாயிருக்கும், உணர்வின்றி நிகழும் இந்த போக்கின் உணர்வு பூர்வமான சுதந்திரமான வெளியீடாக அவனது செயல்கள் இருக்கின்றன என்ற அர்த்தத்தில் அவன் வீரனாகிறான்.

நமது தலைவர் பிரபாகரன் அவர்களும் ஒரு மாமனிதர்தான் நமது அரசியல் செல்நெறியொன்றின் தொடக்கி வைப்பாளர் என்ற வகையில். அவர் மறைந்து ஒரு வருடங்கள் கடந்துவிட்ட சூழலில் சிங்களத்திற்கு வெற்றியின் குறியீடாகவும் நமக்கு வீழ்சியின் குறியீடாகவும் அவர் மாறியிருக்கிறார். இந்த வரலாற்றுப் போக்கிற்கு புறம்பாக எதனையும் திணிக்கவோ கற்பனை செய்யவோ முடியாது. இதுதான் யாதார்த்தம் என்றால் இதனை உள்வாங்கித்தான் நம்மை அறிய முடியும்.

நெகிழ்சியற்ற துணிவு, எதிரிகளிடம் மண்டியிடாமை, தனது நலன்களை துச்சமாக மதிக்கும் பண்பு ஆகியவற்றின் குறியீடாக அவர் இருக்கிறார். இருப்பார். தமிழர் தேசிய அரசியல் வரலாற்றில் இதுவரை தலைவர்கள் என அறியப்பட்டவர்கள் எவருமே தான் தனது குடும்பம் என்ற நலன்களை பாதுகாத்துக் கொண்டவர்கள்தான். அதிலிருந்து முற்றிலும் வேறுபட்டதொரு பண்புவெளிப்பாடாக திரு.பிரபாகரன் மட்டுமே தனித்துத் தெரிகிறார். அந்தளவிற்கு தான் தனது குடும்பம் எல்லாவற்றையும் தனது இலட்சியத்திற்காக பலி கொடுக்கக் கூடிய ஒருவராக அவர் இருந்திருக்கிறார். இதில் அவர் தெளிவாக இருந்திருக்கிறார் என்றே தெரிகிறது. நாளைய வரலாற்றில் எந்த சந்தர்ப்பத்திலும் பல் ஆயிரம் போராளிகளின் வீரச்சாவிற்கு மத்தியில் தனது குடும்பத்தை பேணிக் கொண்டான் பிரபாகரன் என்ற அவச் சொல்லிற்கு ஆளாகிவிடக் கூடாது என்பதில் அவரிடம் திடமான உறுதி இருந்திருக்கிறது. அந்த உறுதிக்கு முன் நாம் தலை வணங்குவோம்.

நமது கால் நூற்றாண்டு கால வாழ்வுடன் சக்திமிக்க ஆளுமையாக கலந்துகிடந்த அவர் இனிவரப்போகும் நமது வரலாற்றுக் காலத்தில் சரிக்கும் பிழைக்குமான அரசியல் குறியீடாக நிலைத்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. அவரைக் கடவுளாக்கி வழிபடுவவோர் அல்லது அவரை கேள்விகளுக்கு அப்பாற்பட்ட மணிதராகச் சித்தரிக்க முயல்வோர் அனைவரும் அவர் மறைந்த ஓராண்டை நினைவு கொள்ளும் இந்த சந்தர்ப்பத்தில் தன்னலமற்ற அவர் பண்பை மனதில் கொண்டு செயலாற்றுவதே அவருக்கும் அவர் நேசித்த நமது மக்களின் விடுதலைக்கும் நாம் செலுத்தும் பெருமரியாதையாகும் என்பதை இந்த கட்டுரை சுட்டிக்காட்ட விழைகிறது.

சரி பிழைகளுக்கும் விருப்பு வெறுப்புகளுக்கும் அப்பால், நமது பெருமதிப்புக்குரிய மறைந்த தலைவர் திரு.பிரபாகரன் அவர்களுக்கு நமது வீர வணக்கத்தைச் செலுத்துவோம். அவருடன் இணைந்து கொள்கை என்ற ஒன்றைத் தவிர வேறு எதற்கும் இடம் கொடுக்காமல் வீர மரணத்தை ஏற்றுக் கொண்ட அந்த தன்னலமற்ற அனைத்து மாவீரர்களையும் நமது பேரன்பால் போற்றுவாம். அமைதியில் விழிகள் தாழ்த்துவோம்.





‘’’

Monday, August 2, 2010

‘துரோகி’ கட்டமைக்கப்படும் அரசியல்

1

எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கின்றது. அது 1990 ஆம் ஆண்டு காலப்பகுதி, மாதம் சரியாக ஞாபகம் இல்லை. விடுதலைப்புலிகளின் இரண்டாம்மட்ட தலைவர் மாத்தையா என அழைக்கப்பட்ட மகேந்திரன் எனது சொந்த ஊரான தம்பலகாமத்திற்கு வருகிறார். மக்கள், தம்பலகாமத்தின் பிரதான வாயில் பகுதியான புதுக்குடியிருப்பிலிருந்து வீடுகள் தோறும் நிறைகுடங்கள் சகிதம் பூக்கள் தூவி அவரை வரவேற்றனர். எனது வீட்டு வாயிலில் வைத்து அவருக்கு நான் சந்தனப் பொட்டிட்டது எனக்கு இப்போதும் நன்றாக ஞாபகம் இருக்கின்றது. இந்த சம்பவம் இடம்பெற்ற போது எனக்கு வயது 14. அப்போது தமிழ்த் தேசியம் என்ற சொல்லைக் கூட நான் கேள்வியுற்றிருக்கவில்லை. விடுதலை போராட்டம,; அரசியல் இது பற்றியெல்லாம் எதுவும் தெரிந்திருக்கக் கூடிய சூழலும் எனக்கு கிடைக்கவில்லை.

ஆனால் தமிழ்த் தேசிய அரசியல் குறித்தும் விடுதலைப் போராட்ட வரலாறு குறித்தும் நான் அறிந்து கொள்ள முற்பட்ட பிற்காலத்தில் அன்று சந்தனப் பொட்டிட்ட மாத்தையா எனக்கு துரோகியாகவே அறிமுகம் செய்யப்பட்டார். அன்றைய அரசியல் பதிவுகள் அவரை அவ்வாறுதான் அறிமுகம் செய்தன. இது குறித்து இப்போது நினைத்துப் பார்க்கும் போது ஒரு வகையில் விசித்திரங்கள் நிறைந்த பாதையில் பயணித்து வந்திருப்பதான உணர்வே கிடைக்கின்றது. அவர் ஏன் துரோகியாகிப் போனார் என்பதற்கான காரணங்களை புலிகளின் மேற்பார்வையில் வெளியிடப்பட்ட நூல்களில் கானலாம். இது பற்றி அடேல் பாலசிங்கம் தனது ‘சுதந்திர வேட்கையிலும்;’ சொல்லியிருக்கின்றார். இது மாத்தையா குறித்து பேச முயலும் ஒரு கட்டுரையல்ல. துரோகி என்ற சொல் எனக்கு முதல் முதலாக பரீட்சயமான சம்பவம் ஒன்றை நினைவு கொள்ளும் நோக்கிலேயே இந்த விடயத்தை எடுத்தாண்டுள்ளேன்.

நான் நினைக்கின்றேன் நமது தமிழ்த் தேசிய அரசியலில் அதிகம் பிரபலமான சொல் ‘துரோகி’ என்பதாகத்தான் இருக்க முடியும். அந்த அளவிற்கு விடுதலை என்ற சொல் கூட பரவலடைந்திருக்கவில்லை. ஆரம்பத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி மேடைகளில் அமிர்தலிங்கம் போன்றவர்களால் தமது எதிரணியினரை இழிவுபடுத்தும் நோக்கில் கையாளப்பட்ட ‘துரோகி’ பின்னர் ஆயுதவழியில் விடுதலை தேடிப் புறப்பட்ட இயக்கங்களால் தத்தெடுக்கப்பட்டது. இறுதியில் இயக்கவழி அரசியலில், தமது செயற்பாடுகளை விமர்சிப்போர், மாற்று நிலைப்பாடுகளைச் சொல்லுவோர், ஆக்க பூர்வமான விமர்சனங்களை முன்வைப்போர் என அனைத்து தரப்பினரையும் இந்தச் சொல் துரத்தியடித்தது. சில நேரங்களில் அவர்கள் குருதியில் நனைந்து தன்னை நிறுவிக் கொண்டது. இன்று வரை இந்த சொல் மாற்று கருத்துக்களை சொல்வோரை அச்சுறுத்தி அடிபணிய வைக்கும் ஆயுதமாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை அதிகம் விடுதலைப்புலிகள் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் ஏனையோர் அனைவரும் தூய்மையானவர்கள் என்று தங்களை சொல்லிக் கொள்ள முடியாது. புலிகள் தமக்கு எதிரணியில் இருப்போரை (மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டோர் குறித்து இங்கு நான் குறிப்பிடவில்லை) மக்கள் மத்தியிலிருந்து அன்னியப்படுத்துவதற்கு எவ்வாறு ‘துரோகி’ என்ற சொல்லை ஒரு உக்தியாகக் கைக்கொண்டு வந்தனரோ அவ்வாறே புலிகளுக்கு எதிரான அணியில் இருந்தோரும் தம்மை விமர்சிப்போரை, நிராகரிப்போரை தூற்றுவதற்கும் பழிவாங்குவதற்கும் அதே ‘துரோகி’ பட்டத்தையே பயன்படுத்திக் கொண்டனர். எங்குமே கருத்து வெளிப்பாட்டுக்கான நாகரிகம் பின்பற்றப்பட்டிருக்கவில்லை. இத்தனை அழிவுகளுக்கு பின்னரும் கூட இதில் பெரியளவு முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதே மிகவும் துரதிஸ்டவசமானது. இதற்கு சிறந்த உதாரணம் எனது இந்தியா குறித்த கட்டுரை தொடர்பில் எனக்கு றோ பட்டம் சூட்டப்பட்டமையாகும். ஒரு கருத்து நிலைப்பாட்டை கருத்தாக எடுத்துக் கொண்டு எதிர்வினையாற்றக் கூடிய சூழல் நம்மத்தியில் இன்னும் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியளவு வளர்ச்சியடையவில்லை. இந்த போக்கில் மட்டும் இடதுசாரி வலதுசாரி என்றெல்லாம் நமக்குள் பேதங்கள் இல்லை. நமக்கு முரண்பாடான கருத்துக்களை கூறுவோரை என்ன வழியைக் கையாண்டாவது உரையாடல் அரங்கிலிருந்து அகற்றிவிட வேண்டுமென்பதே நமது முதன்மை நோக்காக இருக்கின்றது. இது ஒரு எதேச்சாதிகார வழிமுறை இதனை புலிகள் செய்தால் பாசிசம் மற்றவர்கள் செய்தால் புரட்சி என்று அர்த்தம் கற்பிப்பது எவ்வாறு சரியாகும் என்று எனக்கு விளங்கவில்லை.

இதில் பிறிதொரு சுவார்ஷயமான விடயம் இருக்கின்றது. இது ‘துரோகி’ என்று ஒருவரை குறிப்பிடாமலேயே அவரை துரோகியாக்கும் கலை. இந்த கலையை கற்றுக் கொள்ள வேண்டுமாயின் அதனை நமது தமிழ் இடதுசாரிகளிடமிருந்தே (இதிலும் விதிவிலக்குகள் உண்டு) கற்றுக் கொள்ள முடியும். முன்னைய ‘துரோகி’ பட்டம் பேராட்ட சூழலில் மாற்று நிலைப்பாடுகளில் இயங்குவோரை இலக்கு வைத்தது ஆனால் நமது இடதுசாரிகளின் அனுகுமுறையோ வித்தியாசமானது. தாம் மார்க்சியம் என்று கருதும் ஒரு நிலைப்பாட்டுக்கு எதிராக கருத்துக்களை முன்வைப்போரை தனிமைப்படுத்துவதற்கும், மனச் சோர்விற்கு உள்ளாக்கி ஒரு வகையான உளவியல் நெருக்கடிக்குள் தள்ளிவிடும் குரூர எண்ணம் கொண்ட அணுகுமுறை இவர்களுடையது. இங்கு துரோகி என்ற பட்டம் சூட்டலுக்குப் பதிலாக சி.ஜ.ஏ, றோ போன்ற பட்டங்கள் சூட்டப்படும். சொற்களில் மட்டுமே வித்தியாசம்.

2
இன்று ‘துரோகி’ என்பது நமது சூழலில் மிகவும் அருவருப்பூட்டும் ஒரு சொல்லாக மாற்றியிருக்கின்றது. இதனைப் பயன்படுத்தியவர்களையே அது இன்று துரத்துவதுதான் இதிலுள்ள பெரிய சோகம். சமீபத்தில் எனது நன்பர் ஒருவரிடம் இது பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது அவர் சொன்னார். ‘துரோகி’ இது ஒரு மலினப்பட்ட சொல். இது பற்றி பேசுவதே ஒரு வகையில் அவமானகரமானது என்றார். இதில் ஒரு வேடிக்கையான விடயம் என்னவென்றால் மே.18 இற்கு முன்னர் எவரெல்லாம் பெரும் மனிதர்களாகவும், வீரர்களாகவும் போற்றப்பட்டார்களோ அவர்கள் எல்லாம் இன்று துரோகிகள் ஆக்கப்பட்டிருப்பதுதான். சில வேளை நாளை சரனடைந்து முகாம்களில் வாழும் போராளிகள் பொது மன்னிப்பின் பேரில் வெளியில் வந்தால், பொது மன்னிப்புப் பெற்ற அனைவருமே துரோகி ஆக்கப்பட்டாலும் கூட ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இந்த இடத்தில்தான் ‘துரோகி’ என்ற சொல் கொண்டு கட்டமைக்கப்படும் அரசியல் ஒரு கேள்வியை உந்தித் தள்ளுகின்றது. யார் யாருக்கு துரோகி? இதனை தீர்மானிப்பது எதிர்நிலைப்பட்ட அரசியலா அல்லது மக்களின் நலனா?


மே18 இற்கு முற்பட்ட புலிகளின் தலைமையிலான தமிழ்த் தேசிய அரசியல் சூழலில் ‘துரோகி’ என்பதன் அர்த்தம் மிகவும் எளிமையானது. எவர் புலிகளின் தலைமைக்கு எதிராக செயற்பட எண்ணுகின்றாரோ, எவர் புலிகளின் தலைமைக்கு எதிராக சிந்திக்கின்றாரோ அவர் துரோகி. ஏனெனில் அவர் தலைமைக்கு விசுவாசமற்று இருக்கின்றார் என்ற ஒற்றைப்பார்வையே இங்கு மேலாதிக்க வாதமாக இருந்தது. புலிகளின் காலத்தில் ‘துரோகி’ என்பதன் அரசியல் பரிமாணம் இவ்வாறுதான் அமைந்திருந்தது. இந்தச் சூழலில் புலிகளை கோட்பாட்டு ரீதியாக விமர்சிப்பதாகக் கூறிக் கொண்டோரும் அந்தச் சொல்லையே பல்வேறு சந்தர்ப்பங்களில் தம்மை நிலைநிறுத்த பயன்படுத்திக் கொண்டனர்.

இன்று நிலைமை மேலும் மோசமடைந்திருக்கின்றது. மே18 இற்கு பிற்பட்ட காலத்தை ‘துரோகிகள்’ வசைபாடும் படலம் என்று சொன்னாலும் அது மிகையில்லை, அந்தளவிற்கு துரோகிகள் மலிந்து விட்டார்கள். முன்னராவது ஒரு அளவு கோல் இருந்தது. புலிகளின் தலைமைக்கு அவர்கள் விசுவாசமற்றவர்கள் ஆகவே அவர்கள் துரோகிகள். ஆனால் இப்போது என்ன அளவு கோல் கொண்டு இந்த ‘துரோகி’ பட்டங்கள் சூட்டப்படுகின்றன. இதனை தீர்மானிப்பது யார்? ஒரு வகையில் கோட்டாம்பாக்க தமிழ் சினிமா பார்ப்பது போன்றிருக்கின்றது எங்கள் ஈழத் தமிழர் தேசிய அரசியல்.

ஒருவர் துரோகியாக்கப்படும் போது அவர் யாருக்கு துரோகியாக இருக்கின்றார் என்பதுதான் முதன்மையான கேள்வியாக இருக்க வேண்டும். அவர் குறிப்பிட்ட ஒரு சிலரின் அரசியலுக்கு அல்லது அவர்களின் விருப்பங்களுக்கு துரோகியாக இருக்கின்றரா அல்லது தனது மக்களுக்கு துரோகியாக இருக்கின்றாரா? எனவே அடுத்தவருக்கு துரோகி பட்டம் சூட்ட விருப்புவோர் இந்த கேள்வியில் நின்று சிந்திப்பது அவசியம். இல்லாவிட்டால் நாளை அனைவரும் துரோகியாக்கப்படலாம். இவ்வாறான வசை புராணங்களில் நேரத்தை விரையம் செய்வோர், இறுதியில் அது உங்களையும் விட்டுவைக்கப் போவதில்லை என்பதை நினைவில் நிறுத்திக் கொள்வது நல்லது. இன்னொன்றையும் மனங்கொள்வது அவசியம், நேற்று கொண்டாடப்பட்டோர் இன்று துரோகியாகிருப்பது போல் இன்ற தூற்றப்படுவோரை வரலாறு பெரும் மனிதர்களாக, மக்களின் நலனில் நின்று சிந்தித்தவர்களாக பதிவு செய்யலாம். எல்லாமே காலநிர்ணத்திலேயே தங்கியிருக்கின்றது.

கியூபப் தேசிய புரட்சியாளர் ஹெலே மார்த்தி திறமையாளர்கள் பற்றி இவ்வாறு கூறுவார். ‘கையறு நிலையில் உள்ளவர்களுக்கு உதவுவதுதான் திறமையுள்ளவர்களின் கடமையாகும், இதுதான் மனிதர்களை அளவிடும் கருவி’ தமிழர் தேசமெங்கும் கையறு நிலையில் இருக்கும் மக்களுக்கு தோள்கொடுப்பதும், அவர்களது நலன்கள் குறித்து சிந்திப்பதும் துரோகமென்றால், தமிழர் தேசத்தில் துரோகியாக இருப்பது குறித்து நாம் பெருமைப்படலாம்.


யதீந்திரா
‘’’



Friday, September 25, 2009

புரட்சிகர அரசியலின் தார்மீக நியாயமும் நமது மொழிபெயர்ப்பு நம்பிக்கைகளும்

1

ஒருவரது தனிப்பட்ட அனுபவத்தில், அவலங்களிலேயே பெரிய அவலம் தனது நம்பிக்கைகள் சிதைந்து செல்வதற்கு தானே சாட்சியாக இருப்பதுதான். நாம் ஒன்றை அன்னாந்து பார்த்துக் கொண்டிருக்க நாம் கனவிலும் நினைத்துப் பார்க்காத பல விடயங்கள் நம் முன் நிஜமாகியிருக்கும் சூழலில் சில நாட்களாகவே சில கேள்விகள் மனதை அரித்துக் கொண்டிருந்தன. புரட்சிகர அரசியலின் தார்மீக நியாயம் என்ன? அப்படி ஏதாவது இருக்கிறதா? உண்மையிலேயே மார்க்சியம், புரட்சிகர அரசியல் மற்றும் விடுதலை அரசியல் என்ற சொற்களுடன் தமது வாழ்வையே நகர்த்திக் கொண்டிருப்பவர்களுக்கு இது ஒரு வகையான அதிர்ச்சிக்கும் விரக்திக்கும் உரிய காலமாகத்தான் இருக்க முடியும் ஆனால் அதிர்ச்சி, விரக்திக்கு அப்பால் விடயங்களை பாசீலிக்க வேண்டிய தேவை நமக்குண்டு என்ற அடிப்படையில்தான் இந்த கட்டுரையை எழுதுகின்றேன்.

நான் எனது பாடசாலைக்காலத்தில் பிடெல் காஸ்ரோவின் வரலாறு ‘என்னை விடுதலை செய்யும்’ என்ற நூலை படித்ததிலிருந்து அவரின் எழுத்துக்களுக்காக ஏங்கித் திரிந்த காலத்தை இன்றைய சூழலுடன் பொருத்திப் பார்க்கும்போது கவலைப்படுவதைத் தவிர வேறு என்னதான் செய்ய முடியும் என்னால்?. ஆனால் மேற்படி நிலைமைகள் ஏற்படுத்தியிருக்கும் சோர்வுக்கு அப்பால் இன்றைய காலத்தின் பின்புல அரசியல் குறித்து பார்ப்பதே எனது நோக்கம். அவ்வாறு பார்ப்பதுதான் அடுத்த தலைமுறை மத்தியில் ஆரோக்கியமான உiராயடல்களுக்கு வழிவகுக்கும். அது வெற்று சுலோக அரசியலையும் வெறும் உணர்ச்சிவசப்படுதல்களையும் கடந்து செல்லக் கூடியதொரு சிந்தனைப் பாராம்பரியத்திற்கு வழிசமைக்கும். கடந்த மாதம் வரை உலக புரட்சிகர அரசியலில் ஆதர்~மம் கியூபா என்றும் புரட்சிகர அரசியலின் விழைநிலம் லத்தீன் அமெரிக்கா என்றும் என்னிடம் ஒரு நம்பிக்கையிருந்தது. இப்பொழுது அந்த நம்பிக்கையை நிரந்தரமாக நிறுத்திவிட்ட ஒரு முற்றுப்புள்ளி மட்டும்தான் துருத்திக் கொண்டு தெரிகிறது.

2
உலகின் பல பாகங்களிலும் கிறிக்கட், புட்வோல் இன்னும் என்னென்னவோ கேளிக்கைகள் அரங்கேறிக் கொண்டிருக்க மனித குலமே வெட்கித் தலைகுணியும் வகையில் ஈழத் தமிழர்களின் போராட்டம் பயங்கரவாத சுலோகத்தின் கீழ் மிக நுட்பமாக அழித்தொழிக்கப்பட்டது, பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். ஒரு தேசிய இனம் தனது அடிப்படைகளை இழந்து நடு வீதிக்கு வந்தது. இது ஒரு பக்கமென்றால் அடுத்தது இந்த வரலாற்று காலம் நமக்கு தந்திருக்கும் படிப்பினைகள். என்னைப் பொருத்தவரையில் இந்தச் சூழல் தரும் மிகமுக்கிய படிப்பினை என நான் பார்ப்பது இன்றைய அரசியலின் அரசியலை விளங்கிக் கொள்வதற்கு கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தைத்தான்.

ஒரு வெற்றி தரும் படிப்பினைகளை விட ஒரு தோல்வி தரும் படிப்பினைகள் அதிக கனதியுடையவை. ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டம் இன்று கண்டிருக்கும் தோல்வி நமக்கு முன் நிறுத்தியிருக்கும் அடிப்படைக் கேள்வி அறவழியற்ற உலக அரசியலை நாம் எவ்வாறு அறவழியில் எதிர்கொள்வது? அடிப்படையில் அரசியல் என்பதே நலன்களை கையாளும் கலையாக இருக்கும் போது அரசுகளுக்கிடையிலான உறவில் புரட்சி, விடுதலை மற்றும் தார்மீக நியாயம் இப்படியான சொற்களுக்கு ஏதாவது உயிர்ப் பெறுமதி இருக்க முடியுமா? அப்படியிருப்பதாக நம்பியது நமது முட்டாள்தனமா? நாம் அரசியலின் அரசியலை விளங்கிக் கொள்ள முடியாதவர்களாக இருந்திருக்கிறோமா?

3
இது இடது – வலது என்ற அரசியல் பிரிவு நிலைகள் அர்த்தமிழந்து கிடக்கும் காலம். நான் இதனை அரசியல் அர்த்தத்தில் இடதில் வலதும், வலதில் இடதும் கலந்து பின்னிப் பிணைந்து கிடக்கும் இடவலக் கலவிக் காலம் என்பேன். குழம்மிய குட்டையில் மீன் பிடிக்கும் கெட்டித்தனத்தில்தான் ஒருவரது அல்லது ஒரு சமூகத்தினது வெற்றி தங்கியருக்கிறதே தவிர இங்கு இடது வலது என்றவாறான அரசியல் பிரிவுநிலைகளிலல்ல.

90களில் சரியத் தொடங்கிய சோவியத்தின் சிகப்புநிற அரசியல் செல்வாக்கு படிப்படியாக உலக சோசலிச முகாம்களை தேசியவாத அரசியல் நோக்கி நகர்த்தியது, அதுவரை சோவியத்தின் இராட்சத பலத்தின் நிழலில் தமது இருப்பை உறுதிப்படுத்திவந்த தேசங்கள் போக்கிடமற்று புதிதாக உருவெடுத்த அமெரிக்கா தலைமையிலான ஒற்றை ஒழுங்கில் கலந்தன. பொதுவாக இந்த பின்சோவியத் காலத்தை அமெரிக்க மேலாதிக்க அரசியல் காலம் என பலர் கணித்தாலும் அது முற்றிலும் சரியானதொரு கணிப்புத்தானா என்பது பிறிதொரு விவாதத்திற்குரியதாகும். ஏனென்றால் இந்த காலத்தில் அமெரிக்க தலைமையிலான அரசியல் ஒழுங்கொன்று உருவாகியிருந்தாலும் அதன் எதிர் அணியில் நிறங்களற்ற அரசியல் கூட்டுக்களும் உருவாகின. குறிப்பாக சீனா, ரஸ்யாசார்ந்து அவ்வாறான நாடுகள் தமது இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ள முயன்றன. கியூபா, பொலிவியா, நிக்கரகுவா போன்ற நாடுகளும் அமெரிக்க எதிர்நிலையில் தமது இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் சீனா மற்றும் ரஸ்ய அணியில் கைகோர்த்துக் கொண்டன.

இங்கு கவனிக்க வேண்டிய விடயம், இந்த கூட்டுக்கள் கொள்கை சார்ந்தல்லாமல் அரசியல் நலன்கள் சார்ந்தாகவே அமைந்திருந்தன என்பதே. குறிப்பாக சோவியத்தின் சிதைவிற்கு பின்னர் உருவெடுத்த புதிய அரசியல் சூழலில் அரசியல் கோட்பாடு, புரட்சிகர இலக்கு என்றவாறான அர்த்தத்தில் தேசங்களுக்கு இடையிலான கூட்டுக்கள் உருவாகியிருக்கவில்லை. இருவேறுபட்ட நம்பிக்கைகள் சார்ந்த சீனாவிற்கும் ஈரானுக்கும் இடையில் நிலவும் உறவிற்கு என்ன அர்த்தத்தை நாம் கற்பிக்க முடியும்? நலன்கள் என்ற ஒன்றைத்தவிர வேறு என்ன விளக்கத்தைச் சொல்ல முடியும்? ரஸ்யாவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையில் நிலவும் உறவை எந்த கருத்தியல் கொண்டு விளக்க முடியும்? எனவே இந்த பின்புலத்தில் கவனம் கொண்டால் ஒரு உண்மை நமக்கு வெள்ளிடைமலையாகும,; அதாவது பின் சோவியத் காலத்தில் அமெரிக்க தலைமைலான வலுவான அரசியல் தளம் ஒன்று உருவாகிருந்தாலும் அது ஒன்று மட்டுமே அரசியல் தளமல்ல சீனா சார்ந்தும், ரஸ்யா சார்ந்தும், லத்தீனமெரிக்க கண்டம் சார்ந்தும் பல அரசியல் தளங்கள் உருவெடுத்தன. இவைகள் தத்தமது நலன்கள் சார்ந்து தமக்குள் உடன்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டன. இவ்வாறு ஏற்படும் அரசியல் கூட்டுக்கள் அனைத்தும் பெரும்பாலும் அமெரிக்கா தலைமையிலான அரசியல் அணிக்கு எதிர்நிலையில் இருப்பதால் இவைகள் ஏதோ புரட்சிகரமான முற்போக்கான அணிகள் போன்ற மாயைகள் நிலவியது ஆனால் உண்மையில் அப்படியொன்றும் கிடையாது. குறிப்பாக சீனா, மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக நடைமுறைகள் குறித்த விவாதங்களுக்கு இடமற்ற எதேச்சாதிகார அரசியல் ஒழுங்கையே இன்றுவரை கொண்டிருக்கிறது. ரஸ்யா செச்னியா விடயத்தில் தனது கோர முகத்தை தெளிவாக நிரூபித்திருக்கிறது. பாக்கிஸ்தான் போன்ற நாடுகளின் எதேச்சாதிகார பிற்போக்குத் தனம் பற்றி நாம் விவாதிக்க வேண்டிய தேவையே இல்லை. எனவே பின்சோவியத் கால அரசியல் ஒழுங்கை பலவாறான நலன்கள் சார்ந்த அரசியல் சக்திகளின் போட்டிவாத அரசியலின் காலமென்றே நாம் வரையறுக்கலாம். இங்கு அரசியல் குழும்பிக் கிடக்கின்றது. குழும்பிய குட்டையில் மீன் பிடிக்கும் போட்டியில் ஒவ்வொருவரும் தமது பங்கிற்காக இயங்குகின்றனர்.

4
மீண்டும் லத்தீனமெரிக்க அரசியலுக்கு வருகிறேன். இங்கும் நான் மேலே குறிப்பிட்டது போன்றுதான் நிலைமைகள் இருக்கின்றன. இன்றைய லத்தீனமெரிக்க அரசியல் என்பது இரண்டாக பிரிந்து கிடக்கிறது. அமெரிக்க கொள்கையுடன் இணைந்து பயணிக்கும் நாடுகள் ஒரு புறமாகவும், எதிர்நிலையில் நிற்கும் நாடுகள் இன்னொரு புறமாகவும் இருக்கின்றன, இதில்தான் கியூபா, பொலிவியா, வெனிசுவேலா போன்ற நாடுகள் முன்னனி வகிக்கின்றன. காஸ்ரோ தலைமையிலான கியூபா கடந்த 50 வடங்களுக்கு மேலாக அமெரிக்காவிற்கு வளைந்து கொடுக்காத ஒரு அரசியல் வரலாற்றைக் கொண்டிருக்கிறது என்பதை எவரும் மறுக்க முடியாதுதான், இந்த வளைந்து கொடுக்காத பண்புதான் இடதுசாரி அரசியல் செயற்பாட்டாளர்கள் மத்தியில் அது ஒரு ஆதர்ஸம நாடாக மாறியதற்கு காரணம். சோவியத்தின் வீழ்ச்சி, சீனா தேசியத்திற்கு மாறியமை போன்றவற்றின் பின்புலத்தில், மொஸ்கோவிற்கும் பீங்கிங்கிற்கும் கொள்கைப் பயணம் செய்துகொண்டிருந்த இடதுசாரிகள் போக்கிடமற்று கியூபாவை வலம்வரத் தொடங்கினர் ஆரம்பத்தில் லத்தீனமெரிக்க மார்க்சிய அனுபத்தை அலட்சியம் செய்த மரபுவழி மார்க்சியர்களும் பின்னர் அதனை நோக்கி நகர்ந்தனர்.

லத்தீனமெரிக்க புரட்சிகர அரசியல் என்பது பொதுவாக இடதுசாரி அரசியலாக கணிக்கப்பட்டாலும் அடிப்படையில் அவைகள் தேசிவாதத்திற்கு முதன்மையளிக்கும் அரசியலாகவே இருக்கின்றன. சோவியத்தின் வீழ்ச்சி மற்றும் சீனத்தின் தேசியவாதம் நோக்கிய திருப்பம் ஆகியவற்றின் பின்புலத்திலேயே இதனை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். சேகுவேராவுடன் இணைந்திருந்தவரும் கியூப புரடச்சியின் ஆதரவாளருமான பிரஞ்சு மார்க்சியர் ரெஜி ரெப்கே இனி தேசியத்துடன் இணையாத சோசலிசம் உயிர்வாழ முடியாது என்று குறிப்பிட்டதை இந்த பின்புலத்தில் வைத்துத்தான் நாம் விளங்கிக் கொள்ள முயல வேண்டும். எனவே இங்கு புரட்சிகர அரசியல் ஒழுங்கு என்பது அந்தந்த குறிப்பிட்ட நாடுகளின் நலன்களுடன் மட்டுப்பட்டிருந்ததேயன்றி உலகளாவிய புரட்சிகர அரசியல் ஆதரவு என்ற ஒழுங்கில் ஆரம்பத்திலிருந்தே இணைந்திருக்கிவில்லை. அவ்வாறானதொரு பண்பு சேகுவேராவிடம் மட்டுமே இருந்தது எனலாம் அந்தவகையில் சேயை லத்தீனமெரிக்காவின் இறுதிப் புரட்சியாளர் என நாம் கணிக்கலாம். ஆரம்பத்தில் லத்தீனமெரிக்க கண்டம் தழுவியதாக இருந்த புரட்சிகர அரசியல் ஆதரவு கூட படிப்படியாக மங்கத் தொடங்கியது. சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்காவுடனான உடன்பாடுகளுக்கமைய கொலம்பியாவுடனான உறவுகளை துண்டிக்கும் முடிவை நோக்கி ஈவேசாவேஸ் சென்றிருப்பதை நாம் இந்த பின்னனியில் லைவத்துத்தான் விளங்கிக் கொள்ள வேண்டும்.

கடந்த பலதசாப்தங்களாக பல்வேறு போராடும் சக்திகளுக்கும் கியூப எழுச்சியும் அமெரிக்க எதிர்ப்பு நிலையில் கியூபா கடைபிடித்துவரும் உறுதிப்பாடும் ஒரு வகையான ஈர்ப்புக் கவர்ச்சியைக் கொடுத்தது உண்மைதான். இதில் தமிழகம் மற்றும் ஈழத்தில் இயங்கிய இடதுசாரி நம்பிக்கையாளர்களும் அடங்குவர். அவ்வாறானவர்கள்தான் கியூபா ஜ.நாவில் மனிஉரிமைகள் கழகத்தில் சிறிலங்காவிற்கு ஆதரவாக வாக்களித்து தனது நிஜ முகத்தை காட்டியபோது அதிர்சிக்குள்ளாகினர். இது குறித்து லத்தீனமெரிக்க சிந்தனைகளை பரப்புவதை தனது இலக்காகக் கொண்டு இயங்கிவரும் எழுத்தாளர் அமரந்தா கியூப அதிகாரிகள் மற்றும் புத்திஜீவிகள் குழுவிற்கு ஒரு அதிருப்தி கடிதத்தையும் எழுதியிருந்தார். (அது குறித்து தோழர் N~hபாசக்தி வெளிப்படுத்திய எதிர் கருத்துக்களை நான் இங்கு கருத்தில் எடுக்கவில்லை) அமரந்தாவின் கடிதத்திற்கு பதிலளித்திருக்கும் மார்க்சிய எழுத்தாளரும் தற்போது கியூபாவில் தங்கியிருந்து இயங்கிவருபவருமான ராண் ரெட்நூர் அழித்திருக்கும் பதில் கருத்தில் கொள்ளத்தக்கது…

“மார்ச் மாதத்தில் கொலம்பிய ஆயுதப் போராட்டக் குழுவின் (குயுசுஊ) பின்னடைவிற்கு பிடெலும் சாவேசும் என்ன எதிர்வினையாற்றினார்கள் என்பதை நினைவுபடுத்திப் பாருங்கள். இன்றைய லத்தீன் அமெரிக்காவில் மீதியிருக்கும் ஒரே ஆயுதப் போராட்ட இயக்கம் குயுசுஊ மட்டுமே. இந்நாளில் கியூபாவும் அதன் நேசநாடுகள் இரத்தம் சிந்தாமல் வெற்றி பெறுவதையே விரும்புகிறார்கள். அதுபோன்ற தியாகங்களுக்கு மக்கள் தயாராக இல்லாதபோது அவ்வாறு முடிவு செய்வதும் சரியே.

உங்களது (ஆசிய கண்டத்தில்) பெரும்பாண்மை மக்களின் முன்னேற்றத்திற்கும் நல்வாழ்விற்குமான சாத்தியபாடுகள் முற்றிலும் வேறானவை. கியூபாவின் வெளியுறவுக் கொள்கை சந்தர்ப்பவசமானது என்று வருத்தத்துடன் தெவிக்கும் இவ்வேளையில், அதன் சில உள்நாட்டுக் கொள்கைகளும் கூட அவ்வாறானவை என்பதை தெரிவிக்கிறேன் இதில் நாம் என்ன செய்ய முடியும் என்று தெரியவில்லை”

அமரந்தாவிற்கு பதிலளித்திருக்கும் பிறிதொரு மார்க்சியரும் அவுஸ்திரேலிய சோசலிச கூட்டணியைச் சேர்ந்தவருமான க்ரிஸ் ஸ்லீ நாம் கவனம் கொள்ள வேண்டிய முக்கியமானதொரு விடயத்தை அடிக்கோடிட்டிருக்கிறார்…

“கியூபாவுக்கும் தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கும் ஆதரவாளன் என்றளவில் நான் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளேன். ஆனால் இதில் ஆச்சரியமடையவில்லை. இயன்றளவு பல நாடுகளுடன் நட்புறவு கொள்ள எண்ணும் கியூப வெளியுறவுக் கொள்கை, இந்த நாடுகளிலுள்ள அரசின் தன்மையை கணக்கில் கொள்ளவில்லை.”
இந்த இடத்தில் க்ரிஸ் ஸ்லீ குறிப்பிட்டிருப்பது போன்று கியூபாவின் நட்புறவுக் கொள்கையானது குறிப்பிட்ட நாடுகளின் உள்ளக நிலைமைகளை கருத்தில் கொண்டல்லாமல் அதன் தேசிய நலன்கள் சார்ந்ததாகவே இருக்கின்றது என்பதே துலாம்பரமானது. என்னளவில் இது ஒன்றும் ஆச்சரியமான உண்மையல்ல. கியூபா மட்டுமல்ல அனைத்து நாடுகளும் தத்தமது நலன்கள் சார்ந்தே வெளியுறுவுக் கொள்கைகளை பேணிவருகின்றன. இங்கு லத்தீன் அமெரிக்காவின் சில நாடுகளை நாம் தனித்து பார்க்க முற்பட்டதே கியூபாவின் முடிவு நமக்கு அதிர்ச்சிக்குரியதாக இருக்கக் காரணம். இப்பொழுது எல்லாம் தெளிவாகியிருக்கும் என்றே நம்புகிறேன்.

5
இங்கு நாம் ஒரு விடயத்தை தெளிவாக குறித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது நன்பர்களே! அதாவது அரசினையும் (ளுவயவந) புரட்சிகர அரசியலையும் (சுநஎழடரவழையெசல pழடவைiஉள) பகுத்துப் பார்க்கும் அரசியல் பார்வை நமக்கு தேவை என்பதுதான் அது. அவ்வாறானதொரு பார்வை நம்மிடம் இல்லாததால்தான் கியூபாவின் முடிவு நமக்கு அதிர்ச்சியளிப்பதாக இருந்திருக்கிறது என்றே நான் எண்ணுகிறேன். நாம் பொதுவாகவே கியூபா, வெனிசுவேலா, பொலிவியா போன்ற நாடுகளையும், புரட்சிகர அரசியலையும் இணைத்து புரிந்து வந்திருக்கிறோம். நாடுகள் என்ற ரீதியில் அவற்றின் தேசிய நலன்கள் சார்ந்த இயக்கத்திற்கும் அதில் புரட்சிகர அரசியலின் இயங்குநிலை குறித்தம் நாம் கணிக்கவில்லை. இதுதான் நமது பார்வைக் குறைபாட்டிற்கு காரணம். நமது பார்வைகள் குறைபாடுடையதாக இருப்பது ஒரு பிழையல்ல, திறந்த கலந்துரையாடல், கருத்தாக்கம் பின்னர் விவாதம் இப்படியாகத்தான் நமது உரையாடல் வளர்ந்து சென்றிருக்கிறது, அதுதான் இயங்கியலும் கூட. இங்கு நான் அழுத்திச் சொல்ல முயல்வது என்னவென்றால் நான் மார்க்சியத்தையோ அல்லது விடுதலைசார் அரசியலையோ நிராகரிக்கவில்லை, ஆனால் அவைகள் நமது சூழல் மற்றும் தேவைகளிலிருந்து நோக்கப்பட வேண்டுமென்றே வாதிடுகிறேன். தேவையில்லாமல் அன்னிய அரசுகளின் நிகழ்சிநிரல்களுக்குள் மூக்கை நுழைக்க வேண்டிய தேவை இனியும் நமக்குத் தேவையில்லை என்றும் அவர்களது நிகழ்சிநிரலை நமது சூழலுக்குள் திணிக்க வேண்டியதில்லை என்றும்தான் நான் வாதிட முயல்கிறேன். பிடெல் அமெரிக்காவை எதிர்க்கிறார் என்பதற்காக மட்டுமே நாம் இங்கு எதிர்க்கத் தேவையில்லை, பிடெல் எதிர்ப்பது தனது தேசிய நலன்களிலிருந்தே அன்றி உலகளாவிய நன்மைக்காகவல்ல என்ற உண்மையை உணர்ந்து நாம் நமது செயற்பாடுகளை வடிவமைத்துக் கொள்ள வேண்டும் என்றே வாதிடுகிறேன். நமது சூழலில் அவ்வாறான தேவை இருக்குமாயின் அது குறித்து நமது சூழலுக்கு ஏற்ப நடவடிக்கைளை எடுக்கலாம். இப்படியொரு பார்வைதான் நமது தமிழ்ச் சூழலுக்கு தேவை என்றே குறிப்பிடுகிறேன். ஈழத் தமிழரின் விடுதலைப் போராட்டம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அதிர்ச்சியடைந்த இந்திய மாவோசிஸ்ட் அமைப்பு அந்த தோல்வியில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டுமென்ற அர்த்தத்தில் இருபது பக்க அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கின்றது. என்னளவில் சொல்வேன் புலிகளின் தோல்வியில் இருந்து கற்றுக் கொள்வதற்கு முன்னர் அவர்கள் தங்களை மாவோசிஸ்ட் என்று அழைக்கும் நடைமுறையை மாற்றி இந்திய சூழலுக்கு அமைவாக பிறிதொரு பெயரில் இயங்குவது அவசரமானது. இந்தியாவை பலவீனப்படுத்துவதை குறியாகக் கொண்டியங்கும் ஒரு நாட்டின் தலைவரான மாவோவின் சிந்தனைகளின் நீட்சியாக தம்மை அப்பட்டமாக அடையாளப்படுத்திக் கொள்வதானது ஒருபோதுமே அவர்களுக்கு இந்திய மத்தியதர வர்க்கத்தின் மத்தியில் ஆதரவை பெற்றுக் கொடுக்கப் போவதில்லை. மாவோவிடமிருந்து கற்றுக் கொள்ளலாம் ஆனால் இந்தியச் சூழலில் மாவோ ஒரு போதும் தலைவராக முடியாது. இவ்வாறான பார்வைகளை உள்ளடக்கிவாறான புதிய சிந்தனைகளே இன்று நமக்கு தேவை என நான் கருதுகிறேன்.

இங்கு பிடெல் மற்றும் பல லத்தீனமெரிக்க அரசிலாளர்களுக்கு, தமிழர் அரசியல் பற்றி தெரியாது, அது குறித்து நாம் அவர்களது கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை என்றவாறான அர்த்தமற்ற உரையாடல்கள் பயனற்றது நன்பர்களே! ஒரு புரட்சிகர அரசு என்று தன்னை நிறுவிக் கொள்ள முயலும் அமைப்பு அல்லது நாடு தான் எடுக்கும் முடிவு தனது புரட்சிகர அரசியலின் தார்மீக நியாயத்திற்கு ஏற்புடையதுதானா என்பதை பரிசீலித்தே முடிவுகளை எடுக்க வேண்டும். கியூபா அவ்வாறு நடந்து கொள்ளவில்லை, அது தனது அமெரிக்க எதிர்ப்பு என்ற தன்னல அரசியலில் கவனம் கொண்டிருந்ததேயன்றி ஒட்டுமொத்த மானுட நீதி தழுவிச் சிந்திக்கவில்லை. சில தசாப்தங்களாக நமக்கு ஆதர்~மாக இருந்து கியூபா ஏன் அவ்வாறு சிந்திக்கவில்லை என்றால் இன்றைய உலக அரசியல் சூழலில் அப்படியொன்று இல்லை என்பதால்தான். ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் இருக்கும் வரை மார்க்சியம், புரட்சிகர அரசியல் செயற்பாடுகள் குறித்த உரையாடல்களும் இருக்கவே செய்யும் ஆனால் அந்த புரட்சிகர அரசியல் செயற்பாடுகளுக்கு எல்லைகள் தாண்டிய பெறுமதி இருக்கப்போவதில்லை என்பதே எனது வாதம்.


விவாதங்கள் தொடரட்டும்…

18,ஓகஸ்ட் - 2009 - http://www.keetru.com/